Showing posts with label நாட்டுநடப்பு. Show all posts
Showing posts with label நாட்டுநடப்பு. Show all posts

Friday, October 28, 2011

கடவுள் கண்டிப்பானவர் அல்ல ...

அண்மையில் என் ஊர் அருகில் உள்ள கோவிலில் நடந்த ஒரு விபத்தை கேள்விப்பட்டதும் மிக வருத்தத்துடன் இந்த பதிவு . சபரிமலை ஜோதி பார்க்க செல்வோருக்கும் இந்த பதிவின் கேள்விகள் பொருந்தும். 

கடவுள் , கோவில் விஷயத்தில் எல்லாருக்கும் பொதுவாக பயபக்தியோடு கூடிய ஒரு பிடிவாதம் உண்டு. ஆனால் அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கும் நிலை சில சமயம் ஏற்படுகிறது. உண்மையிலேயே உடல்வலிமை இருந்து ,  கடுமையாக விரதம் இருந்து கட்டுப்பாடோடு தங்களால் தங்கள் பக்தியை வெளிப்படுத்த முடிபவர்கள் இதில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் வயதானவர்கள் , உடல் நலிவுற்றவர்கள் இதை தாங்களும் பின்பற்றி பிறகு பாதிக்கப்பட்டு கடவுளையே திட்டுவது மன்னிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

முன்னோர்கள் சில அர்த்தங்களை புரிய வைப்பதற்காக ,நாம் அவற்றை மறக்க கூடாது என்பதற்காக சம்ப்ரதாயங்களாக சில தருணங்களில் சிலவற்றை சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் அதன் உட்கருத்தை விட்டுவிட்டு அதை வெறும் சடங்குகளாக மட்டுமே பாவித்து செய்யும் அவல நிலை இப்போது ஏற்பட்டு உள்ளது. 




சில உதாரணங்கள் :

பழனி மலை எங்கள் ஊரிலிருந்து அரை மணி நேர பயணமே. மாதாமாதம் எங்கள் பக்கத்து வீட்டு பெண்கள் பௌர்ணமி அன்றோ வேறு எதாவது விஷேச தினத்திலோ அதிகாலை கிளம்பி, பேருந்தில் சிரமப்பட்டு, நெரிக்கும் கூட்டத்தில் பயணப்பட்டு சென்று, வெயிலில் மலை ஏறி, நீண்ட வரிசையில் சிக்கி ....... அப்ப்ப்பப்ப்பா   தரிசனம் பெறும்போது நடுப்பகல்  ஆகி பாதி பேர் மயக்கம் ஆகியிருப்பார்கள். அதிலும் ஒரு தடவை ஒருவருக்கு மிகவும் முடியாமல் போக , ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி வருத்தப்பட்டு சொன்னார் - ' இனி அந்த முருகனுக்கும் எனக்கும் ஆகாது .. எத்தனை தடவை மலை ஏறி வந்துருப்பேன்.. இப்படி பண்ணிட்டானே ?' 

கேள்வி : ஏன் இப்படி ? முருகனுக்கு  எப்போதும் நமக்கு யோசனை சொல்ல நேரம் இல்லாத காரணத்தினால்தான் Common Sense எனப்படும் இயல்பறிவை கொடுத்திருக்கிறார். உங்கள் இயல்பறிவுக்கு வேலை கொடுக்காமல் இப்படி சிரமப்பட்டு வந்தால் அதற்கு அவர் என்ன செய்வார்?.அப்படியானால் எப்போது கோவிலுக்கு போவது ?  இதற்கு ஒரு வழி இருக்கிறது. என அப்பாவும் நானும் , சகோதரனும்  மாலை  ஒரு நான்கு மணிக்கு கிளம்பி நிதானமாக , எந்த ஒரு விஷேச நாளும் இல்லாத நாளில் மெதுவாக் கதை பேசி மலையேறி காத்திருக்கவே வேண்டாத ,அன்று வந்திருக்கும் மிக சிறிய கூட்டத்தில் சென்று இரண்டு மூன்று முறை தரிசித்து பின் தங்க தேரோட்டமும் பார்த்து , ஒரு மணி நேரம் கதை பேசி விட்டு பத்து மணிக்குள் வீட்டுக்கு சென்று விடுவோம்.

 கடவுளை தரிசித்த திருப்தியும் உண்மையான அமைதியை அனுபவித்த பரம சந்தோசத்தையும்  உணர்வோம். இப்போது சொல்லுங்கள் ? எது புத்திசாலித்தனம் ? அதே முருகன்தான் , அதே பழனிதான்.. கிடைத்த வரமும் ஒன்றும் குறைந்ததல்ல ..  யோசியுங்கள் .. 

அடுத்த நிகழ்வு :  'அய்யயோ .. அவ்வளவு  தூரம் போயிட்டு அர்ச்சனை பண்ண முடியாம போய்டுச்சே .. இது என்ன சோதனை ? பவுர்ணமி அன்னைக்கு அர்ச்சனை பண்ணுனா கோடி புண்ணியமே ' என்று சிலர் புலம்புவார்கள். அர்ச்சகர்களால் செய்யும் அர்ச்சனை மட்டுமே ஆண்டவனை சென்றடைகிறது என்று முழுமையாக நம்பும் பரிதாபத்திற்குரிய பக்தர்கள் அவர்கள். 

அர்ச்சகர்கள் உச்சரிப்பது சமஸ்க்ருத மந்திரம்.   சமஸ்க்ரிதம் என்பது தேவலிபி என்று கொண்டாடப்படுவது.அதாவது கடவுளின் பாஷை.நாம் நம் பெயரை எழுதி கொடுத்தால் , அவர் அந்த மொழியில் கடவுளிடம் நமக்கு வேண்டுவார்.
கேள்வி -   கடவுளுக்கு அந்த பாஷை மட்டும்தான் தெரியுமா ? அதையே நாம் நமக்கு தெரிந்த தமிழில் (அது எந்த தமிழாக இருந்தாலும் ) ' ஆண்டவா , இந்த அறிவு கெட்ட ராமசாமிய காப்பாத்துப்பா..'  , ' இன்னா கணேஷா .. நீ மட்டும் ரெம்போ சுளுவா உங்க அப்பா வெச்ச எக்ஸாம்லோ பாஸ் பண்ணி பழம் கெலிச்சுட்ட?  .. அத்தயே நான் பண்ணுனா பிட் அடிக்கரேன்னு வெளிய தொரத்துறாங்க.. இன்னா நியாயமப்பா இது'  என்று எப்படி சொனாலும் அவருக்கு புரியும். 

கோவிலுக்கு போவதே மன திருப்திக்குத்தான் . அங்கு போயும் அர்ச்சனை பண்ண முடியவில்லை , அபிஷேகம் பார்க்க முடியவில்லை என்று புலம்பினால் கடவுளையும் கோவில் கட்டிய உண்மையான காரணத்தையும்  புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் 

அடுத்த நிகழ்வு : எனக்கு அதிக பணம் கொடுத்து சிறப்பு தரிசனம் செய்வதில் உடன்பாடு இல்லை .ஒன்று பொது தரிசனத்தில் போவேன் . கூட்டமாக இருந்தால் கோபுர தரிசனம் மட்டுமே. கோவில் என்பது சமத்துவமாக இருக்க வேண்டும். அங்கும் பணம் சார்ந்த  இத்தனை பிரிவுகள் இருந்தால் , மறைமுகமாக அங்கு ஒரு ஏற்றத்தாழ்வு வருகிறது.  முன்னூறு ருபாய் டிக்கெட்டில் போகும் பக்தர்கள் , பொது தரிசனத்தில் வருவோர் முன் அர்ச்சகர்களால் பணிவுடன் கவனிக்கபடுவது கண்டிக்க வேண்டிய மிகபெரிய தவறு. 




கோவிலில் மற்றவரை பார்த்து வணங்ககூடாது என்ற சடங்கு முட்டாள்தனம் அல்ல . கோவிலில் வணங்கத்தக்கவன் இறைவன் மட்டுமே என்பதை உணர்த்தவே அது. அங்கும் வி.ஐ.பி தரிசனம் என்று கருவறை வரை சிலரை அனுமதிப்பதும் , பலரை காக்க வைப்பதும் மக்களை அவமானப்படுத்துகிறதோ    இல்லையோ கலியுகத்தில் மௌன விரதம் கடைபிடிக்கும் கடவுளின் பொறுமையை சோதிக்கிறது.

கேள்வி: ஆணவத்தையும் , அகங்காரத்தையும் மறந்து நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று நினைக்கவே கோவிலுக்கு போகிறோம். அங்கும் சிறப்பு தரிசனத்தில் போய் , பொது தரிசன பக்தர்கள் கூட்டம் தனக்கு முன்னால் செல்வதைக்கண்டு ' தேவஸ்தானத்திற்கு மானேஜ் செய்யவே தெரியல .. அவங்கள முன்னால விட்டா நமக்கு என்ன மரியாதை ?'  என்று தன் வரட்டுத்திமிரை காட்டுவோரை பக்தர் என்று கடவுள் ஏற்றுக்கொள்வாரா? 

நிகழ்வு: விரதம் என்பதை கடுமையாக இருத்தல் என்று தவறாக அர்த்தம் செய்து பட்டினி கிடந்து உருகி மயங்கி தன உடல்நிலையை கெடுத்துக்கொண்டு கடைசியில் கடவுளை திட்டும் புண்ணியவான்கள் மிக அதிகம்.

 உதாரணமாக சபரிமலை விரதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உண்டு . காட்டில் நட , கல் மண்ணில் வெறுங்காலில் நடந்தால் 'Accupressure' முறையால் தசைகளின் நரம்புகள் அழுத்தப்பட்டு உடல் ஆரோக்கியம் அடையும் . ஒரு வேலை மட்டும் உண் - வருடம் முழுக்க உடலில் ஏற்பட்ட  சில கோளாறுகள் தானாகவே சரியாகும். குளிர்ந்த நீரில் நீராடு - உடல் சூடும் தணியும் , தியானம் செய்ய உடல் ஒத்துழைக்கும் என்பதே அவற்றின் நோக்கம்.   

கேள்வி : கால்வலி இருக்கும்போது கண்டிப்பாக வெறுங்காலில் நடக்கவும் , அல்சர் இருக்கும்போதும் ஒரு வேலை மட்டும் உண்ண வேண்டும் என்பதும் , காய்ச்சல் அடிக்கும்போதும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றும் அந்த விரதங்கள் போதிப்பதில்லை . அதை செய்து விட்டு , கடவுள் வருவார் ,'பக்தா .. உன் பக்தியை மெச்சினேன் . வேண்டும் வரம் கேள் ' என்று கேட்பார் என்று நினைத்து ஏதும் கிடைக்காமல் கடவுளைத் திட்டினால் கடவுள் உங்களை மதிக்க கூட மாட்டார். 

எல்லாவற்றிற்கும் மேலாக வரிசையில் ஒரு ஒழுங்கு இல்லாமல் , கடவுளை இவனுக்கு முன்னால் நான் தரிசிக்கவேண்டும் என்று அடித்து பிடித்து மற்றவரைத் தள்ளிவிட்டு கடவுளை கை எடுத்து கும்பிட்டால் பாவம் தீராது. 



கடவுள் நல்லவர்தான். என்றாவது ஒரு நாள் உண்மையிலேயே பக்குவப்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று ஆசைப்பட்டு காத்துகொண்டிருகிறார். பாவம் அவருக்கு அந்த பக்தரின் தரிசனம் கிடைக்காமலேயே இருக்கிறது. 

என்னை பொறுத்தவரை , இப்படி ஒரு முரட்டுத்தனமான , சுயநலமான , சடங்குளை வெறும் சடங்குகளாக அர்த்தம் புரியாமல் கடைப்பிடிக்கும் பக்தர்களை விட , கடவுள் இல்லை என்று ஒதுங்கி இருக்கும் நாத்திகர்கள் சீக்கிரம் சொர்க்கம் அடைவார்கள். இவர்கள் ? 

அது சரி , பகலிலேயே சுட்டெரிக்கும் வெயிலில் அருந்ததி நட்சத்திரம் பார்க்கும் புத்திசாலிகளுக்கும் ,கோவிலில் குங்குமத்தையும் திருநீறையும் சுவரில் கொட்டுவோருக்கும் கடவுள் மன்னித்து சொர்க்கக் கதவை திறந்தால் அங்கும் முண்டியடித்து நெரிசலில் பலபேரை எமலோகம் அனுப்புவார்கள். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..  

Monday, October 24, 2011

பசி

நாம் எல்லாரும் ஏதோ ஒரு நாள் உலகின் மிக விலைமதிப்பற்ற  உணவை ருசி பார்த்திருப்போம். எங்கேன்னு ஒரு நிமிடம் யோசிச்சு  பாருங்க..

போன வாரம் போன கல்யாணத்திலா ?  முந்தின வாரம் போன டீம் பார்ட்டியிலா ?  
இல்லை..இன்னும்  யோசியுங்க..

'ஒ சரி சரி.. என் பையன் பிறந்தநாளுக்கு பெரிய ஹோட்டல்ல போயிருந்தோம்..அப்போ சாப்பிட்டேன்..அதுதான்'-னு சொல்றீங்களா.. இல்லேங்க..

இதெல்லாம் மிகையா போனா ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் இருக்குமா..? விலைமதிப்பே  இல்லாத உணவு எது தெரியுமா?




சென்னை வெயில்ல மத்தியான நேரம் பசியோட வீட்டுக்கு வரும்போது , மனைவி நீங்க  ராத்திரிதான் வருவீங்கன்னு எதுவும் செஞ்சிருக்க மாட்டாங்க.. அப்போ கிடைச்ச நேரத்துல இருக்குற சாதமும், ஊறுகாயும் , 
தாளித்த தயிரும் உங்களுக்கு அமிர்தமா இருக்கும்.. 

ஆறு மணி நேரம் காத்திருந்து ,திருப்பதி  தரிசனத்தை முடிச்சிட்டு ,மத்தியானமும் இல்லாம ராத்திரியும் இல்லாம ஒரு நேரத்துல ,  வெளிய வந்து நிக்கும்போது, பசியும் மயக்கமும் கலந்து உங்கள கிறங்கடிக்கும். இந்த நேரத்துல எங்கிருந்தோ ஒருத்தங்க வந்து ,பிரசாதம்-னு சொல்லி பொங்கலும்,புளியோதரையும் கொடுப்பாங்க.. எந்த கௌரவமும் பாக்காம வாங்கி சாப்பிடுவோம். அதுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியுமா?

நாடு விட்டு நாடு போயிருப்போம்.முதல் இருபது நாள் வெறும் ரொட்டியும்,சாண்ட்விச்சும் சாப்பிட்டு சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்து போயிருக்கும்போது,கூட வேலை பாக்குற ஒருத்தர் தன் வீட்டுக்கு மத்தியானம் கூப்பிட்டு சிம்பிளான  விருந்து வைப்பார். 

தடபுடலா இல்லாம சாதம்,சாம்பார்,ரசம்,பொரியல்-னு இருக்குற உணவை நீங்க பாக்கும்போதே 
கண் கலங்கும். அந்த சாப்பாடோட விலை அதிகமா போனா நூறு ருபாய் இருக்குமா..?  ஆனா அந்த நேரத்தில்ல அது விலைமதிப்பில்லாதது.  

இதுதான் நிதர்சனம். கோடியில் புரளும் பணக்காரனும் சரி , தெருக்கோடியில் வேலை பார்க்கும் ஏழையானாலும்   சரி , இருவரையும் இணைக்கும் சக்தி வாய்ந்த ஒரே புள்ளி - பசி. இந்த பசிக்கு நாம் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் நம் எல்லா மரியாதையையும் பசி இரக்கமே இல்லாமல் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் இந்த பசியையும் அதன் தாக்கத்தையும் பசி அல்லாத நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம்.அப்போது கிடைக்கும் உணவையும் நாம் மதிப்பதில்லை. எல்லாரும் , எப்போதும் செய்யும் இந்த சின்ன மிக நுண்ணிய தவறு , எங்கோ யாரோ ஒருவருக்கு பசியை போக்கும் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது.

அந்த தவறுதான் - ஒருவனை திருடன் ஆக்கவும் காரணம் ஆகிறது. இன்னும் சொல்லப்போனால் , எல்லா தவறுகளுக்கும் ஆரம்ப காரணமாக இருப்பது அந்த தவறுதான். அதுதான் - உணவை வீணாக்குதல்.

ஒரு நிமிடம் இந்த வீடியோவைப்   பாருங்கள் :



உணவும் சரி பணமும் சரி , இந்தியாவை பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகளில் சிக்கித்  தவிக்கின்றன. பணம் எப்படியோ போகட்டும். அது அவனவன்  சாமர்த்தியம். உழைத்து சம்பாதித்தாலும் சரி; ஊழல் செய்து சம்பாதித்தாலும் சரி. ஏதோ ஒரு வழியில் எப்படியோ வேறு யாருக்கோ பயன்படும்.எல்லாவற்றையும்  அவனே அனுபவிக்க முடியாது.

ஆனால் உணவு அப்படியல்ல. அதற்கு காலநேரம் உண்டு. இன்று வைத்திருப்பவன் பயன்படுத்தவில்லை என்றால் , வெகு சீக்கிரம் யாருமே பயன்படுத்த முடியாமல் போய்விடும். 
பசியில் பலர் வாடும்போது , உணவளிக்கா விட்டால் கூட        
மன்னிக்கலாம். ஆனால் அதை வீணாக்கினால் ?  
 
ஒரு கல்யாணம். கல்யாண வீட்டார் உணவு வீணாவதை குறைக்க எந்த ஏற்பாடும் பண்ண முடியாது. அவர்கள் எண்ணம் , வருவோரை திருப்தியாக கவனித்து அனுப்புவதே. உணவு வீணானாலும் சரி, ஆனால் பற்றாமல் போய்விட கூடாது என்பதே அவர்கள் இலக்கு.

ஆனால் கல்யாணத்திற்கு போவோர் அதை செயல்படுத்தலாமே.. இதை எல்லாரும் சேர்ந்து செய்ய முடியாது. அவரவர் உணர்ந்து , அவரளவில் திருந்தினாலே போதும். தனக்கு எது தேவையோ அதை அளவாக கேட்டு உண்டால் , மீதமாகும் உணவு அன்றிரவு குப்பைதொட்டிக்கு போகாமல்,அநாதை இல்லத்திற்கு கண்டிப்பாக போகும்.

உணவை வீணாக்குவதிலிருந்து  தப்பிக்க  எளிதாக 4 வழிகள் உள்ளன .
Shopping List : முதலில் , அடுத்த ஒரு வாரத்திற்கான உணவு பட்டியலை உருவாக்குவோம்.அதற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி வைக்கலாம்.
குளிர்சாதனப்பெட்டி இருக்கிறது என்று எல்லாவற்றையும் வாங்கி பிறகு தூக்கி எறிவதை இது தடுக்கும்.

Stick to the List :கூடியவரை பட்டியல்படி சமைக்கலாம். அதில் மாற்றம் இருந்தால் அடுத்த முறை , முதல் முறை வாங்கிய பொருள்களைத் தவிர பிறவற்றை வாங்கலாம்.

Serve in smaller portions: பரிமாறும் அளவு குறைவாகவே இருக்கட்டும். தேவைகேற்ப கொஞ்சமாக  எடுத்து உண்டால் மீதி இருப்பவை வீணாகாது.குப்பைக்கு 
போகாது.

save/share the leftover :மதியம் உணவு மிச்சம் இருந்தால் , இரவு அதற்கேற்ப சமைக்கலாம்.

இதைத் தாண்டியும் மீதமானால் , பசிப்பவர்களுக்கு கொடுக்கலாம்.
இந்த முறைகள் எல்லா நாடுகளிலும் பரவலாக, உணவுப்பண்டங்கள் கண்காணிக்கும் அமைப்புகள் உருவாக்கி  உபதேசித்து வருபவை.

என் ஒரே இடைச்செருகல் கடைசியாக சொன்ன பகிர்தலில்தான். பிச்சைகாரர்களை ஊக்குவிக்காதீர்கள். உடல் ஊனமுற்றவர்க்கு  மட்டும் உதவுங்கள்.
எங்கள் கல்லூரி விடுதியில் விழா  நடந்து முடிந்து ,  உணவு  மீதமாகும்போது ,  வெகு அருகிலிருக்கும் ,மரத்தடியில் அதிகம்பேர் படுத்திருக்கும் கிராமத்தினரிடம் கொடுக்க மாட்டோம். கொஞ்ச தூரம் தள்ளியிருக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு கொடுப்போம். நம் கருணை மற்றவரை சோம்பேறியாக்க கூடாது.

'இதையெல்லாம் யார் சார் கவனிச்சிட்டு  இருப்பா ? எல்லாரும் இப்படியே செய்யறாங்களா?' என்று கேட்கும் புத்திசாலி நண்பர்கள் தங்கள் வழியே செல்லலாம். ஆனால் எந்த ஒரு  சந்தர்ப்பத்திலும்  'என்ன நாடு இது? ' என்று கேட்க அவர்களுக்கு தகுதி இல்லை.




இது விழிப்புணர்வு காலம். எந்த ஒரு நல்ல விசயமும் சரி , ஒரு சாரார் அறிந்தால் உடனே மற்றவருக்கு பகிர எளிதாக  வழியிருக்கிறது.உங்கள் வட்டத்திற்கு  எடுத்து சொல்லுங்கள். 
இந்தியாவின் மிக பெரிய சக்தியே அதன் மக்கள்தொகைதான் (ManPower). அதை தவறான வழிக்கு அனுப்ப அரசியலும், வேறு சில காரணங்களும் இருக்கலாம். அதை தடுக்க முடியாது. ஆனால் அது பசியாய் இருக்க கூடாது.

ஞாபகம் வெச்சுக்கோங்க   - நீங்க வீணடிக்கிற ஒரு வேளை உணவு , இன்னொருத்தரின் ஒரு வேளை  உணவை இழக்க வைக்குது.
காந்தி சொன்னது பல பேருக்கு மறந்து போயிருக்கும் - தனி மனித மாற்றம்தான் எந்த ஒரு தேசமுன்னேற்றத்திற்கும் முதல் படி.

சமுக சேவை வெளிய போய்தான் செய்யணும்னு இல்ல.. வீட்டுக்குள்ளயே பண்ணலாம்.  
யோசியுங்க..

Thursday, October 13, 2011

உள்ளாட்சித் தேர்தல் -A Solo Stunt

'எங்கள் கூட்டணியே நேர்மையான கூட்டணி' 

' அதர்மத்தை அழிக்கவே இந்த கூட்டணி' 

 'எங்கள் கொள்கைகள் வெவ்வேறாயினும் குறிக்கோள்  ஒன்றுதான் ; அதன் விளைவே இந்த கூட்டணி ' 

 'பழையதை மறந்து விட்டோம் ; இனி நடப்பது நல்லதாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த கூட்டணி ' 

 'எங்கள் இரண்டு கட்சிகளும் , மக்கள் சேவை என்ற புள்ளியில்  இணைந்திருக்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்லத் தேவையில்லை'  

'நாங்கள் ஒரே குருகுலத்தில் அரசியல் பயின்றவர்கள்.. நாங்கள் இணைவதில் என்ன ஆச்சர்யம்? '

'இத்தனை வருடங்கள் எங்களை மதிக்காதவர்கள் கூட்டணியில் இருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறோம். ஒரு விதத்தில் இது எங்களுக்கு ஒரு விடுதலை.இனி மக்கள் பணியே எங்களுக்கு முக்கியம்'

'பாசிச கட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை இல்லை. ஆனால் இங்கு வந்ததும் தலைவர் கட்டி அணைத்து வரவேற்றதில் ஏற்பட்ட கண்ணீரில் எங்கள் மனகசப்புகள் கரைந்துவிட்டன.. '

யப்பா...இப்படி எத்தனை உளறல்கள் தாண்டி வந்திருக்கிறோம்.பொறுத்து வந்திருக்கிறோம். மேலே கண்ட அறிக்கைகள் அனைத்தும் ஒரு கட்சி ,இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது கூறிய காரணங்கள் - . கொடுமை.

திமுக தோற்றதில் யாருக்கு என்ன லாபம் கிடைத்ததோ என்னவோ , இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு வரமாக ,தமிழக மக்களுக்கு கிடைத்து விட்டது.
தமிழக வரலாற்றிலேயே ,இந்த உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமான ஒன்று.. நம்புங்கள்... யாரும் யாரோடும் கூட்டணி இல்லை...  

ஜெயிப்பது எந்த கட்சியாய் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் Victory Factor எனப்படும் வெற்றிக்கான காரணத்தை, குழப்பமில்லாமல்  நிர்ணயம் செய்ய மக்களுக்கு இப்போது ஒரே கேள்விக்கான பதில் தெரிந்தால் போதும் - 'இந்த கட்சிக்கு ஒட்டு போட்டால்  ,ஏமாற்றாமல் மக்களுக்கு எதாவது செய்யுமா ? 
இதற்கு முன் செய்திருக்கிறார்களா ?' -  இது மட்டுமே..

மற்ற முறை போல - ' நல்லவர்தான்..ஆனால் இவருக்கு போட்டால் , அந்த கட்சியில் நம் கட்சி கூட்டணி வைத்திருக்கிறதே .. என்ன செய்யலாம்?' என்றோ
'போன முறை ஒன்றும் செய்யவில்லை.இந்த முறை போட வேண்டாம் என்று பார்த்தால் , ஆளும் கட்சியோடு கூட்டு வைத்திருக்கிறாரே..எதாவது தேறுமா?' என்றோ 'குழப்பமா இருக்கே.. இந்த ஆள் ரெம்ப மோசம்.ஆனா என்ன பண்ணித்தொலைக்கிறது? நம்ம ஜாதிகட்சியோட ஆதரவுல நிக்கறாரே..' என்றோ எதுவும் குழம்ப வேண்டாம்.

எல்லாரும் தனித்தனி. அதற்காக எல்லாரும் 'நாங்கள் நல்லவர்கள்.அந்த தைரியத்தில்தான் தனியாக நிற்கிறோம்' என்று சொல்லவில்லை (சொல்ல தகுதியும் இல்லை). கூட்டணி படியவில்லை. அதுதான் காரணம்.

சரி .. இப்போ ஒரு பாமரத்தனமா, வெள்ளந்தியா , சராசரி வாக்காள  ஜனமா கட்சிகள அலசுவோம்.


அதிமுக தனி மெஜாரிட்டி. ஏற்கனவே சொன்ன மாதிரி  ,தேர்தல் முடிஞ்சதும் தேமுதிகவை (இன்னபிற சில்லறை கட்சிகளை )அம்மா தலைமையிலான   அ.இ.அ.தி.மு.க. கட்சியில் நடந்த பொதுக்குழு கூட்ட நிர்வாக கூட்டம்  (இதுல்ல என்ன சுத்தி வளைக்கிறது ? அம்மா தான் கட்சி. அம்மா மட்டும்தான் கட்சி )கழட்டி விடும் என்ற உண்மை அரசியலில் அ , ஆ மட்டுமே தெரிஞ்ச சின்ன பையனுக்கு கூட தெரியும்.

அம்மா அம்மாதான். எப்பவாவது 'இந்த கட்சியை கூட்டணியிலிருந்து  அதிமுக  விலக்குகிறது'ன்னு அவங்களா சொல்லிருக்காங்களா.. ? அந்த கட்சியே வெளிய போறோம்னு அழுதுட்டு ஓடிவர  மாதிரி பண்ணுவாங்க..அதான் பெர்பெக்ட் லீடர்ஷிப்.

ஆக அதிமுக தனியாக நிக்கறதுல எந்த சந்தேகமும், ஆச்சர்யமும்  இல்லை.



திமுக.. மன்னிக்கவும்..அடுத்த நாலரை  வருசத்துக்கு  தேமுதிகவுக்கு அப்புறம்தான் திமுகவை பத்தி பேச முடியும்.
சரி.. தேமுதிக சிறந்த எதிர்கட்சியாக கடந்த நான்கு மாதமாக ,மிக சிறப்பாக ,அருமையாக ,ஒட்டு போட்ட மக்களுக்காக உடனடியாக.. அட என்னப்பா செஞ்சிருக்காங்க..யாராச்சும் சொல்லுங்க - சட்டசபையில் நூற்றுக்கு நூறு சதவீதம் Attention போடுவதை தவிர. 

சரி இப்போ ஒரு வழியா  கூட்டணியில் இருந்து வெளிய வந்திருக்காங்க.. அவங்க கேட்டது மாதிரி அவங்களுக்கு மார்க் போட இன்னும் ஒரு ஆறு மாசம் கொடுப்போம். (இப்படி ஆறு ஆறு மாசம் கொடுத்து அடுத்த தேர்தலே வந்துடும் போல ) .

இப்போ அவங்க தனி. கூட மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட்.  ஹ்ம்ம் அதனால ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. ஏறக்குறைய தேமுதிக மட்டும்தான்.  ராஜ அதிர்ஷ்டம் சூழ்நிலை காரணமா யாருக்காவது ஒரு தடவ வரும். ஆனா அத தக்க வைக்கிறது உங்க சாமர்த்தியம் கேப்டன். இதை அப்புறமா பேசலாம். இப்போ இவங்க தனி. அதான் நமக்கு முக்கியம்.


சரி..இப்போ திமுக.  தோல்விக்கு பிறகு சட்டசபை பக்கம் வரலை. மன்னிக்க. சட்டசபைக்கு உள்ள வரல. பெரும்பாலும் எல்லாரும் உள்ள இருக்காங்க. வெளிய இருக்கறவங்க ,உள்ள இருக்குறவங்கள போய் பாத்துட்டு இருக்காங்க. அவங்க இப்போ ஏழை கட்சி ஆகிட்டாங்களாம் -திமுக தலைவர் சொல்லியிருக்கார்..  ஆனா நல்ல முடிவு எடுத்திருக்காங்க - தனியா நிக்கறதுன்னு.

'உன்னால நான் கெட்டேன்;என்னால நீ கெட்ட'-ன்னு எத்தனை நாள்தான் கோபத்தை அடக்கிட்டு கைகோர்த்து   இருக்கறது. இந்த தடவ தனியாவே அடி வாங்கிக்கிறோம்ன்னு காங்கிரஸ்க்கு  டாட்டா  காமிச்சிட்டார் தாத்தா . இந்த கட்சி சார்பா நிக்கறதுக்கு , ஜெயிலுக்கு போக பயப்படாம தைரியமா இருக்க ,  வேட்பாளர்கள் கிடைச்சிடாங்க போல. அதுவே பெரிய சந்தோசம். இப்போ இவங்க தனி.


அடுத்து காங்கிரஸ்.  வெளி கூட்டணி எதுவும் எடுபடல. சரி உள்ளயாவது ஒற்றுமையா இருக்கறாங்களானா அப்படி எதுவும் தெரியல. மத்தியில சிதம்பரம் நெலமையும் சரியில்ல;உள்ளூர்ல காங்கிரஸ்   கரைவேட்டிக்கும்  கட்டம் சரியில்ல. நாடு முழுக்க எதிர்ப்பலை.

அது எப்படிங்காணும் இவ்வளவு அடிவாங்கியும் பயமே இல்லாம தனியா ஒட்டு கேக்க வரீங்க..?..
ஹ்ம்ம் எந்த தைரியத்துல தனியா நிக்கறாங்கன்னு தெரியல. ஆனா தனியா நிக்கறாங்க.

பாமக - ரெண்டு மாசம் முன்னாடியே டாக்டர் சொல்லிட்டார் - நாங்க இனி தனி-ன்னு. இப்படி சொல்றோமே ? மக்களாவது நம்மள  சேர்த்துக்குவாங்களான்னு ஒரு தடவைக்கு நாலு தடவ யோசிச்சு  சொல்லிருக்கணும். இந்த தடவையாவது சொல்லுங்க டாக்டர் - உங்க கொள்கைதான் என்ன? சரி அத விடுங்க.. உலக மகா அதிசயம் .. இவங்களும் தனி.

மதிமுக..சாரி - வைகோ தனியா நிக்கறார்.

மீதி இருக்குற கட்சிகளும் பெருசா எந்த கூட்டணியும் இல்லாம அங்கங்க தனி கடை போட்டுருக்காங்க..
எத்தனை பேர் மறந்து போய் பழக்கதோசத்துல 'எங்க கூட்டணிக்கு ஒட்டு போடுங்க'-ன்னு சொல்ல போறாங்களோ?!!!? .
இனி பிரசாரத்துலதான் பெரிய காமெடி இருக்கு.

பிரசாரம் நடக்க நடக்கவே , சொல்லும் விஷயங்களுக்கு ஏற்ப  அதிமுகவில இருந்து பல கட்சிகள் சட்டபேரவையில் வெச்ச கூட்டணியிலிருந்து விலக்கப்படும்.

சரி மக்களே.. கட்சிக்கு தனித்தனியா மார்க் போட ரெம்ப வசதியான சந்தர்ப்பம்.  அது பூஜ்யம்னாலும் பரவாயில்ல..சந்தோசமா போடுங்க.
யாருக்கு தெரியும்? இந்த தேர்தல்ல தமிழ்நாட்டுல இருந்து பல கட்சிகள் காணாமலேயே போய்டலாம்.

முந்துங்கள் இந்த சலுகை இந்த முறை மட்டுமே. இந்த ஒரு முறையாவது மக்கள் எல்லாரும் கூட்டணி வைப்போம்.

Get Ready Folks...