Monday, January 23, 2012

திருநாங்கூர் பதினொரு கருட சேவை- 1

நாராயணனும் நம் கலியனும்




பாற்கடலிலே திருமகளும், நிலமகளும், நீளா தேவியும், நித்திய சூரிகளும் புடை சூழ பர வாசுதேவனாக மாயத் துயில் கொண்டுள்ள அந்த மாயன், வைகுண்டத்திலே வியூக நிலையிலே அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். அவரே தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காக்க அவதாரங்கள் எடுத்து விபவ ரூபமாக அருள் வழங்கினார், அந்த பரம்பொருளே அந்தர்யாமியாக எல்லா ஜீவ ராசிகளிலும் விளங்குகின்றார். நாம் எல்லோரும் உய்யும் பொருட்டு , ஒரு பெயரும், ஒரு உருவமும் இல்லாத அந்த பரம் பொருள் அர்ச்சாவதாரமாக பூவுலகிலே பல் வேறு தலங்களிலே எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இந்த ஐந்து நிலைகளுக்கும் உரியவன் அவன் ஒருவனே.



அத்தகைய திருக்கோவில்களில், மயர்வற மதி நலம் பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றவை திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இந்த திவ்ய தேசங்களுள் வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடற் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் தஞ்சை தரணியிலே 40 திவ்ய தேசங்கள் உள்ளன, அவற்றுள் சீர்காழியிலிருந்து 8 கி.மீ து‘ரத்தில் அமைந்துள்ள திருநாங்கூர் திருத்தலத்தை சுற்றி பதினோரு திவ்ய தேசங்கள் உள்ளன. இவை திருநாங்கூர் திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. சோழநாட்டுத் திருப்பதிகளில் நடு நாயகமாக இந்த திருநாங்கூர் திவ்ய தேசங்கள் விளங்குகின்றன.


இந்த திவ்ய தேசங்களின் தனி சிறப்பு என்னவென்றால் வைணவ சம்பிரதாயத்தில் முக்கிய கருதப்படும் மூன்று சுலோகங்களும் எம்பெருமானாலேயே இத்திவ்ய தேசங்களில் உபதேசிக்கப்பட்டன.

முதலாவதான " ஒம் நமோ நாராயணா "
என்னும் நலம் தரும் அஷ்டாத்திர மந்திரத்தை ஆழ்வார்களில் கடைக்குட்டியான திருமங்கை ஆழ்வாருக்கு திருமணி மாடக் கோவில் நாராயணப் பெருமாளால் உபதேசிக்கப்பட்டது.


இரண்டாவதான
" ஸ்ரீமத் நாராயண சரணௌ சரணம் பிரபத்தயே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ "
என்ற த்வைய மந்திரத்தை ஸ்வேத ராஜனுக்கு திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் உபதேசித்தார்.

கீதையிலே
" ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோமோட்ச யிஷ்யாமி மாசுச "
என்னையே தஞ்சம் சரணமடைந்து விடு நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்து மோட்சத்தை அளிப்பேன் என்று கீதோபதேசத்தின் போது கூறிய சரம சுலோகத்தை பார்த்தன்பள்ளியிலே கண்ணன் அர்ஜுனனுக்கு மீண்டும் உபதேசித்தார்.



இந்த திவ்ய தேசங்களின் மற்றொரு சிறப்பு, பிரளய காலத்திலும் அழியாமல் இருந்தது. பாலச வனத்தில் வடக்கே மண்ணியாற்றையும், தெற்கே திருவரங்கக் காவிரியாற்றையும் கிழக்கே பூம்புகார் கடலையும், மேற்கே தரங்கம்பாடியையும் எல்லையாகக் கொண்ட இந்த நாகபுரி ஷேத்ரம் என்னும் திருநாங்கூரைச் சுற்றிய இந்தப் பகுதி மட்டும் பிரளய காலத்தும் அழியாமல் இருந்தது.

இந்த ஷேத்ரத்தில் வைணவ மற்றும் சைவ சமயங்களின் ஏகாதச திருக்கோவில்கள் உள்ளன. இவ்வாறு சைவம் மற்றும் வைணவத்தின் பதினொரு கோவில்கள் உள்ளதற்கான ஐதீகம் என்னவென்றால், மஹா பிரளயத்திற்கு பிறகு தட்சன் ஒரு யாகம் நடத்தினான் அதில் கலந்து கொள்ள சிவபெருமானுக்கு ஆணவத்தால் அவன் அழைப்பிதழ் அனுப்பவில்லை. தட்சன் மகளான தாட்சாயணியும் அங்கு சென்று அவமானப்பட்டு, பின் சிவலோகம் செல்ல விருப்பமில்லாமல் பலசவனம் வந்து, மதங்க மகரிச்ஷியின் மகளாக பூங்கோதை என்ற திருநாமத்துடன் வளர்ந்து வரும் காலத்தில், சிவபெருமானும் மண்ணியாற்றங்கரையில் வந்து தக்ஷ’ணா மூர்த்தியாக யோகத்திலாழ்ந்தார். மஹா விஷ்ணுவும் வைகுந்தத்தை விடுத்து பூலோகம் வந்தார். சிவனும், விஷ்ணுவும் இல்லாததால் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்றுவாரில்லாமல் கவலையடைந்த தேவர்கள் மதங்க முனிவரிடம் வந்து வேண்ட, மதங்க முனிவரின் பிரார்த்தனைக்கிரங்கி பத்ரிகாசரமத்திலிருந்த பெருமாள், நான்கு வேதங்களே நான்கு குதிரைகளாகவும், சந்திர, சூரியர்களையே தேர்க்காலாகவும் கொண்ட திவ்ய திருத்தேரிலே நாங்கூரில் உள்ள இந்திர புஷ்கரணியிலே சேவை சாதித்தார். ஞான திருஷ்டியால் பூங்கோதைதான் பார்வதி என்பதை அறிந்த மஹா விஷ்ணு, யோகத்திலிருந்த சிவபெருமானுக்கு அதை உணர்த்தி அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பின்னர் சிவபெருமான் பதினோரு ருத்ர வடிவம் எடுத்தும், மஹா விஷ்ணுவும் அதே போல் பதினோரு அர்ச்சாவதாரங்கள் எடுத்து இருவரும் இனைந்து அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தனர். பின் அதே ரூபத்தில் இருவரும் பதினோரு திருக்கோவில்களில் அமர்ந்தருளினர் என்பது ஒரு ஐதீகம். எனவே தான் திருநாங்கூரைச் சுற்றி பதினோரு சைவ மற்றும் வைணவ திருக்கோவில்கள் அமைந்துள்ளன.

இந்த நாங்கூரைச் சுற்றி ஏகாதச சைவ மற்றும் வைணவ திருத்தலங்கள் இருப்பதற்கான மற்றொரு ஐதீகமானது, ஒரு சமயம் ஆணவம் கொண்ட பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்ததால் அவரை பிரமஹத்தி தோஷம் பற்றியது. அந்த தோஷத்தைப் போக்க சிவ பெருமான் ஏகாதச ருத்ர அவதாரங்கள் எடுத்து ஏகாதச ருத்ர அசுவமேத யாகம் செய்தார், யாகத்தின் இறுதியில் பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சேவை சாதித்து சிவபெருமானுக்கு அபய பிரதானம் அளித்து சாபம் நீங்க அருள் செய்தார். இந்த திவ்ய தேசங்களில் வந்து வணங்குவோர்களுக்கும் அதே போல கருணை புரிய வேண்டும் என்ற சிவ பெருமானின் வேண்டுகோளுக்கிணங்கி ஏகாதச திவ்ய தேசங்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக கோவில் கொண்டருளினார் பெருமாள். சிவ பெருமானும் எகாதச தலங்களில் கோவில் கொண்டருளினார்.

பரகாலர்


இந்த பதினோறு திவ்ய தேசங்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது தனி சிறப்பு. தமது பெரிய திருமொழியில் திருநாங்கூர் திருப்பதிகள் என்றே பரகாலர் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். அவருக்காக நடைபெறும் 11 கருட சேவையை காணலாமா அன்பர்களே. முதலில் 11  திவ்யதேச பெருமாள்களை சேவித்து விடுவோம்.




திருநாங்கூர் ஏகாதச திவ்ய தேச பெருமாள் தரிசனம்



திருநறையூர் (நாச்சியார் கோவில்) பெருமாளால் வைணவராக சமஸ்ராணம் செய்யப் பெற்ற, திருமங்கை மன்னன், பரகாலன், நீலன், ஆலிநாடன், கலிகன்றி, மங்கையர் கோன், மங்கை வேந்தன், கலியன் என்றெல்லாம் அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசங்களில் திருக்குறையலூரிலேதான் அவதரித்தார். மணக் கோலத்தில் பெரிய பிராட்டியாரோடு வந்த பெருமாளால் திருமணங்கொல்லையில் அஷ்டாத்திர மந்திரோபதேசமும் பெற்றார், இந்த பதினோரு திவ்ய தேசங்களையும் இவர் மட்டுமே மங்களாசாசனமும் செய்துள்ளார். திருமங்கையாழ்வாரோடு பெரிதும் தொடர்புடையவை இத்திவ்ய தேசங்கள்.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருநாங்கூர் திவ்ய தேசங்களாவன:

1. திருமணி மாடக் கோவில்:



மூலவர்-நாராயணன், நந்தா விளக்கு அமர்ந்த திருக்கோலம்,
உற்சவர்- நாராயணன், அளந்தற்கரியான்,
தாயார்- புண்டரீக வல்லி,
தீர்த்தம்- இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரிணி,
விமானம்- பிரணவ விமானம்.

நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்! நரநாராயணனே! கருமாமுகில் போல்
எந்தாய்! எமக்கே அருளாயென நின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து
மந்தாரம் நின்று மணமல்குநாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!



2.திருவைகுந்த விண்ணகரம் :



மூலவர்- திருவைகுந்த நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான் உபய நாச்சியார்களுடன் அமர்ந்த திருக்கோலம்,
தாயார்- வைகுந்த வல்லி.
தீர்த்தம்- லக்ஷ்மீ புஷ்கரிணி, உதங்க புஷ்கர்ணி, விரஜா தீர்த்தம்,
விமானம்-அனந்த சத்யா வர்த்த விமானம்.


சலங்கொண்ட இரணியனது அகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக்கடைந்து அமுதம் கொண்டுகந்தகாளை
நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியிறை கோயில்
சலங்கொண்டுமலர் சொரியும் மல்லிகைஒண்செருந்தி
சண்பகங்கள் மணம் நாறும் வண்பொல்ழிலினூடே
வலங்கொண்டு கயலோடிவிளையாடுநாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே!




3.திரு அரிமேய விண்ணகரம் :




மூலவர்- குடமாடுங் கூத்தர் அமர்ந்த திருக்கோலம்,
உற்சவர்- சதுர் புஜ கோபாலர்,
தாயார்- அம்ருத கட வல்லி.
தீர்த்தம்- கோடி தீர்த்தம், அமுத தீர்த்தம்,
விமானம்- உச்ச சிருங்க விமானம்.



திருமடந்தைமண்மடந்தை இருபாலும் திகழ
தீவினைகள்போயகலஅடியவர்கட்கு என்றும்
அருள்நடந்து இவ்வேழுலகத்தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்தஇருந்தஇடம் பெரும்புகழ்வேதியர் வாழ்
தரும்இடங்கள்மலர்கள்மிகுகைதைகள்செங்கழுநீர்
தாமரைகள்தடங்கள்தொறும் திகழ
அருவிடங்கள்பொழில்தழுவி எழில்திகழும்நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்குமடநெஞ்சே!



4.திருத் தேவனார் தொகை :



மூலவர்- தெய்வ நாயகன் நின்ற திருக்கோலம்,
உற்சவர்- மாதவப் பெருமாள்,
தாயார்-கடல் மகள் நாச்சியார்.
தீர்த்தம்- சோபன தீர்த்தம்,
விமானம்- சோபன விமானம்.


போதலர்ந்தபொழிற்சோலைப் புறமெங்கும்பொருதிரைகள்
தாதுதிரவந்தலைக்கும் தடமண்ணிதென்கரைமேல்
மாதவன்தானுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு
தேதெனவென்றுஇசைபாடும்திருத்தேவனார்தொகையே.




5.திருவண் புருடோத்தமம் :



மூலவர்- புருடோத்தமன் நின்ற திருக்கோலம்,
தாயார்- புருடோத்தம நாயகி.
தீர்த்தம்- திருப்பாற் கடல் தீர்த்தம்,
விமானம்- சஞ்சிவி விமானம்.



கம்பமாகடலடைத்துஇலங்கைக்குமன் கதிர்முடியவை பத்தும்
அம்பினாலறுத்து அரசுஅவன்தம்பிக்குஅளித்தவனுறை கோயில்
செம்பலாநிரைசண்பகம்மாதவி சூதகம்வாழைகள்சூழ்
வம்புலாம்கமுகோங்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.






6.திருச்செம்பொன் செய்கோவில் :




மூலவர்- பேரருளாளன், ஹேம ரங்கர்,செம் பொன் செய் அரங்கர், தாமோதரன் நின்ற திருக்கோலம்,
உற்சவர்-ஹேமாங்கர்(செம்பொன் அரங்கர்),
தாயார்- அல்லி மாமலர் நாச்சியார்.
தீர்த்தம் - ஹேம புஷ்கரிணி,
விமானம்- கனக விமானம்.



பேரணிந்துஉலகத்தவர்தொழுதேத்தும் பேரருளானன்எம்பிரானை
வாரணிமுலையாள்மலர்மகளோடு மண்மகளும்உடன்நிற்க
சீரணிமாடநாங்கைநன்னடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே
காரணிமேகம்நின்றதொப்பானைக் கண்டுகொண்டுஉய்ந்தொழிந்தேனே.




7.திருத்தெற்றியம்பலம் :

மூலவர்-செங்கண்மால்,அரங்கநாதர், லக்ஷ்மிரங்கர் புஜங்க சயன திருக்கோலம்,
தாயார்- செங்கமலவல்லி
தீர்த்தம்- சூரிய புஷ்கரிணி,
விமானம்- வேத விமானம்.



மாற்றரசர்மணிமுடியும்திறலும்தேசும்
மற்றவர்தம்காதலிமார் குழையும் தந்தை
கால்தளையும்உடன்கழலவந்துதோன்றிக்
கதநாகம்காத்தளித்த கண்ணர்கண்டீர்
நூற்றிதழ்கொளரவிந்தம்நுழைந்தபள்ளத்து
இளங்கமுகின்முதுபாளைபகுவாய்நண்டின்
சேற்றழையில்வெண்முத்தம்சிந்தும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்துஎன்செங்கண்மாலே.



8.திருமணிக்கூடம் :

மூலவர்-மணிக்கூட நாயகன், வரதராசப் பெருமாள்,
தாயார்- திருமாமகள் நாச்சியார்.
தீர்த்தம்- சந்திர புஷ்கரிணி,
விமானம் சாம்பூந்தம் என்ற பொன்னாலானது.




தூம்புடைப்பனைக்கைவேழம் துயர்கெடுத்தருளி மன்னு
காம்புடைக்குன்றமேந்திக் கடுமழைகாத்தஎந்தை
பூம்புனற்பொன்னிமுற்றும்புகுந்து பொன்வரண்ட எங்கும்
தேம்பொழில்கமழும்நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே.




9.திருக்காவளம்பாடி :


மூலவர்-கோபாலகிருஷ்ணன்(இராஜ கோபாலன்) ருக்மணி சத்ய பாமையுடன் நின்ற திருக்கோலம்,
தாயார் -மடவரல் மங்கை, செங்கமல வல்லி.
தீர்த்தம்- தடமலர்ப் பொய்கை,
விமானம்- சுயம்பு விமானம்.



தாவளந்துஉலகமுற்றும் தடமலர்ப்பொய்கைபுக்கு
நாவளம்நவின்றங்கேத்த நாகத்தின்நடுக்கம்தீர்த்தாய்!
மாவளம்பெருகி மன்னுமறையவர்வாழும்நாங்கை
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண் நீயே.



10.திருவெள்ளக்குளம்(அண்ணன் கோவில்):



மூலவர்- ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள், நின்ற திருக்கோலம்,
தாயார்- அலர்மேல் மங்கை.
தீர்த்தம்-வெள்ளைக்குளம்,
விமானம்-தத்துவ விமானம்.
இத்தலத்திலே தான் திருமங்கை ஆழ்வாரின் தர்ம பத்தினி குமுத வல்லி நாச்சியார் கண்டெடுக்கப்பட்டார்.




கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய்!
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னு நாங்கூர்
திண்ணார்மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா! அடியேனிடரைக்களையாயே.




11. திருப்பார்த்தன் பள்ளி :



மூலவர்: தாமரையாள் கேள்வன்,
உற்சவர்- பார்த்தசாரதி,
தாயார்- தாமரை நாயகி.
தீர்த்தம் - சங்கசரஸ் கங்கைத் தீர்த்தம்,
விமானம்- நாராயண விமானம்.



கவளயானைக்கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்
குவளைமேகமன்னமேனிகொண்டகோன் என்னானை யென்றும்
தவளமாடுநீடுநாங்கைத் தாமரையாள்கேள்வனென்றும்
பவளவாயாள்என்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே.






 பொன்னி நதி பாய்ந்து வளம் சிறக்கும் திருநாங்கூர்ப்பதிகளை மங்களாசாசனம் செய்த இந்த திவ்ய தேசப் பெருமாள் அனைனவரும், திருமங்கையாழ்வரும் கலந்து கொள்ளும் மிக சிறப்பு வாய்ந்த ஏகாதச கருட சேவை திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு அடுத்த நாள் நடைபெறுகின்றது. அந்த தெய்வீக அனுபவத்தை தாங்களும் பெற தங்களை என்னுடன் வருமாறு தங்களை அழைக்கின்றேன். " பெருமாளை பெரிய திருவடியாம் கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்", இங்கு பதினோரு பெருமாள்களையும் ஒரே நேரத்தில் சேவிக்கும் அற்புதமான வாய்ப்பு கிடைக்கின்றது. அடுத்த பதிவில் அந்த தெய்வீக அனுபவத்தை பெருமாள் கொடுத்த சேவையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

( இது  ஒரு மீள்பதிவு, இந்த வருட கருடஸேவை இன்று  23-01-2012 தொடங்கியது  திருமங்கையாழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு, மண்ணியாற்றில் மஞ்சக்குளிக்கண்டருளி திருமணிக்கூடம் சென்று தங்கியிருப்பார்)

4 comments:

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க. விளக்கங்களும் படங்களும் அருமை.

S.Muruganandam said...

மிக்க நன்றி சித்ரா.

RAMA RAVI (RAMVI) said...

பிரமாதமாக இருக்கு பதிவு.பெருமாள் படங்கள் எல்லாம் அற்புதம்.

S.Muruganandam said...

வாருங்கள் RAMVI மிக்க நன்றி